அமெரிக்க புலனாய்வு நிறுவனமான எஃப்பிஐ சர்வர்களில் ஒன்றுக்குள் ஊடுருவி ஆயிரக்கணக்கானோருக்கு, சாத்தியமிகு சைபர் தாக்குதல் நடப்பது தொடர்பான எச்சரிக்கை மின்னஞ்சல்களை அனுப்பி ஹேக்கர்கள் கைவரிசை காட்டியது பற்றிய விசாரணையை புலனாய்வாளர்கள் தொடங்கியுள்ளனர்.
கடந்த சனிக்கிழமை காலையில் இது குறித்து கருத்து வெளியிட்ட எஃப்பிஐ, இது தங்களுடைய விசாரணையின் அங்கம் என்று கூறியது. ஆனால், மேற்கொண்டு எந்த தகவலையும் அதன் அதிகாரிகள் வெளியிடவில்லை.
அமெரிக்காவின் உள்துறை பெயரில் இந்த மின்னஞ்சல்கள் அனுப்பப்பட்டுள்ளன.
“அவசரம்: கணினி அமைப்பில் அச்சுறுத்தல்” என்ற தலைப்பில் இந்த அச்சுறுத்தல் அனுப்பப்பட்டுள்ளது.
மேலும், ஸ்பேமாஸ் என்ற லாபநோக்கமற்ற ஸ்பேம் மின்னஞ்சல்களின் செயல்பாட்டை கண்காணிக்கும் அமைப்பின் கூற்றுப்படி, டார்க் ஓவர்லார்ட் என்ற மிரட்டிப் பணம் பறிக்கும் குழுவின் நவீன சங்கித்தொடர் சைபர் தாக்குதலுக்கு நீங்கள் இலக்கு என்று மின்னஞ்சல்களில் எச்சரிக்கப்பட்டிருந்தது.”
“இந்த மின்னஞ்சல்கள் எஃப்பிஐயின் உள்கட்டமைப்பில் நிறுவப்பட்ட சர்வர்களில் ஒன்றில் இருந்து நேரடியாக வந்தால் இந்த மின்னஞ்சல் ஒருவித சலசலப்பை ஏற்படுத்தியது. அந்த மின்னஞ்சல்களின் தலைப்பகுதியில் எஃப்பிஐ மின்னஞ்சல் டொமைன் குறியீடு இருந்ததாகவும் அதை அனுப்பியவர் யார் அல்லது தொடர்பு விவரம் எதுவும் மின்னஞ்சலில் இல்லை,” என்றும் ஸ்பேமஸ் அமைப்பு கூறியுள்ளது.
அமெரிக்க ஊடகங்கள், இத்தகைய எச்சரிக்கை மின்னஞ்சல்கள் ஒரு லட்சம் பேருக்காவது அனுப்பப்பட்டிருக்க வேண்டும் என்று செய்தி வெளியிட்டுள்ளன.

பட மூலாதாரம்,REUTERS
இந்த நிலையில், எஃப்பிஐ அமைப்பு சனிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில், “@ic.fbi.gov என்ற முகவரியில் இருந்து காலையில் அனுப்பப்பட்ட போலி மின்னஞ்சல்கள் பற்றி அறிந்துள்ளோம்,” என்று கூறியுள்ளது.
மேலும், “மின்னஞ்சல்கள் பற்றி தெரிய வந்ததுமே, அது செல்வதற்கு காரணமான வன்பொருளின் இணைப்பு இணையத்தில் இருந்து துண்டிக்கப்பட்டு, அறியப்படாத அனுப்புநர்களிடம் இருந்து வரும் மின்னஞ்சல்கள் பற்றி எச்சரிக்கையாக இருக்குமாறும் சந்தேக செயல்பாடு பற்றி ic3.gov or cisa.gov என்ற இணையதளத்தில் தொடர்பு கொண்டு தகவல் தரவும் பொதுமக்களை ஊக்குவிக்கிறோம்,,” என்று எஃப்பிஐ கூறியுள்ளது.
சலசலப்புக்கு காரணமான மின்னஞ்சல்கள், எஃப்பிஐ சர்வருக்குள் எளிதாக நுழைந்து தனி நபர் அனுப்பினாரா அல்லது இதில் ஹேக்கர்கள் கைவரிசை காட்டியுள்ளார்களா என்பது இன்னும் தெளிவாகவில்லை.