September 30, 2023 7:45 am
adcode

யுக்ரேன் சிக்கல்: தலைநகர் கீவ் அருகே ரஷ்யப் படைகள் கடும் யுத்தம் – முன்னாள் அணு உலை செர்னோபிள் வீழ்ந்தது

இரவு கவிந்த நிலையில் யுக்ரேன் தலைநகர் கீவில் மக்கள் பலர் மெட்ரோ ரயில் நிலையங்களிலும், பாதாளத் தளங்களிலும் தஞ்சம் புகுந்துள்ளனர்.
படக்குறிப்பு,இரவு கவிந்த நிலையில் யுக்ரேன் தலைநகர் கீவில் மக்கள் பலர் மெட்ரோ ரயில் நிலையங்களிலும், பாதாளத் தளங்களிலும் தஞ்சம் புகுந்துள்ளனர்.

யுக்ரேன் மீது படையெடுத்து வரும் ரஷ்யா, தலைநகர் கீவ் அருகே முழு மூச்சுடன் தாக்குதலை நடத்தி வருகிறது. யுக்ரேன் ராணுவமும் ரஷ்யப் படைகளை விரட்டியடிக்க கடுமையாக முயன்று வருகிறது.

கீவ் புறநகர்ப் பகுதியில் உள்ள விமான தளம் ஒன்றில் கடும் போர் நடந்துவருகிறது. இந்த தளத்தை ரஷ்யா கைப்பற்றினால், தலைநகரைக் கைப்பற்றுவதற்கான முகாமாக இந்த இடம் மாறக்கூடும்.

கிழக்கு, வடக்கு, தெற்கு ஆகிய திசைகளில் இருந்து தாக்கிய பிறகு, யுக்ரேன் மீதான ரஷ்யத் தாக்குதல் பல முனைகளில் இருந்து தொடர்கிறது.

டஜன் கணக்கானவர்கள் இந்தப் போரில் கொல்லப்பட்டிருப்பதாகவும், ஆயிரக்கணக்கானவர்கள் தப்பி ஓடியிருப்பதாகவும் கூறுகிறது யுக்ரேன்.

தொலைபேசியில் நாட்டு மக்களுக்கு உரையாற்றிய புதின் போர் பிரகடனம் செய்தார். இதையடுத்து, நேற்று வியாழக்கிழமை அதிகாலை ரஷ்யப் படைகள் தாக்குதலைத் தொடங்கின. இதில் எந்த நாடு தலையிட்டாலும், அவர்கள் முன்னெப்போதும் கண்டிராத பின்விளைவுகள் ஏற்படும் என்று எச்சரித்தார் புதின்.

முதலில் யுக்ரேன் நகரங்கள் மீதும், ராணுவ தளங்கள் மீதும், ஏவுகனைகள், போர் விமானங்கள் அலை அலையாகத் தாக்குதல் நடத்தின. இதையடுத்து டாங்குகள் நீண்ட ரஷ்ய – யுக்ரேன் எல்லையைக் கடந்து யுக்ரேனுக்குள் நுழைந்தன.

தொடர்ந்து போராடப்போவதாக யுக்ரேன் அதிபர் வொலோதிமிர் ஸெலன்ஸ்கி சூளுரைத்திருக்கிறார். “புதிய இரும்புத் திரை” வீழ்ந்துகொண்டிருப்பதாகவும், மேற்கு திசையிலேயே நாடு நீடித்திருப்பதை உறுதி செய்வதே தமது பணி என்றும் அவர் கூறினார். யுக்ரேனின் அனைத்துப் பகுதிகளிலும் இருந்து ரிசர்வ் படையினரும், கட்டாயமாக படைப் பணிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களும் சண்டைக்கு அழைக்கப்படவேண்டும் என்று ஸெலன்ஸ்கி உத்தரவிட்டுள்ளார்.

ஒரு ஆயுதத்தைத் தாங்க வலியுமையுள்ள ஒவ்வொருவரும் ரஷ்யாவை விரட்டியடிப்பதற்கான முயற்சியில் இணைந்துகொள்ளவேண்டும் என்று நாட்டின் பாதுகாப்பு அமைச்சர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

நேற்று மாலை பொழுது சாய்ந்த நிலையில், தலைநகர் மீது ரஷ்யத் தாக்குதல் நடக்கலாம் என்ற அச்சம் அதிகரித்தது. நாள் முழுவதும் துப்பாக்கிச் சண்டையும், குண்டுவெடிப்புகளும் தலைநகரில் கேட்டுக்கொண்டே இருந்தது. “நாசக்காரர்கள்” கீவ் நகரில் நுழைந்துவிட்டதாக அதிபரை மேற்கோள் காட்டி யுக்ரேன் ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.

Share

Related News