தமிழ்நாட்டின் நேற்று (08) இடம்பெற்ற குன்னூர் ஹெலிகாப்டர் விபத்தில் இந்தியாவின் முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் அவரது மனைவி உள்பட 13 பேர் உயிரிழந்ததாக உத்தியோகபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தமிழ் நாட்டின் நீலகிரி மாவட்டம் குன்னூர் வெலிங்டனில் உள்ள இராணுவ பயிற்சி கல்லூரியில் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக நேற்று (08) முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி மற்றும் உயர் அதிகாரிகள் உள்பட 14 பேர் ஹெலிகாப்டரில் புறப்பட்டு சென்றனர்.
ஹெலிகாப்டர் குன்னுார் மலைப்பகுதியில் காட்டேரி என்ற பகுதியில் பறந்துகொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ஹெலிகாப்டரில் பயணம் செய்த 14 பேரில் 13 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியானது.
இந்நிலையில், இந்த ஹெலிகாப்டர் விபத்தில் முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் உள்பட 13 பேர் உயிரிழந்ததாக இந்திய விமானப்படை அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
இது தொடர்பாக இந்திய விமானப்படை வெளியிட்டுள்ள அறிவிப்பில், ஹெலிகாப்டர் விபத்தில் முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி மித்குலிஹா ராவத் உள்பட 13 பேர் உயிரிழந்தனர்.
குரூப் கேப்டன் வருன் சிங் படுகாயங்களுடன் வெல்லிங்டன் ராணுவ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.