நாளொன்றுக்கு 17 நிமிடம் வீதம் 10 ஆண்டுகள் தொடர்ச்சியாக கையடக்கத் தொலைபேசியை பயன்படுத்தினால் (ஆயிரம் மணித்தியாளங்களுக்கு மேல்) புற்றுநோய் ஏற்படும் அபாயம் நூற்றுக்கு 60 வீதம் வரை அதிகரிக்கும் என விசேட வைத்தியர்களினால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வொன்றின் மூலம் தெரியவந்துள்ளது.
அமெரிக்காவின் பேர்க்லி (Berkeley) பல்கலைக்கழகத்தின் விசேட வைத்திய நிபுணர்களினால், கையடக்கத் தொலைபேசியை பயன்படுத்துபவர்கள் மற்றும் அவர்களின் உடல்நலம் குறித்து மேற்கொள்ளப்பட்ட 46 வௌ;வேறு ஆய்வகங்களில் இந்த விடயம் கண்டறியப்பட்டுள்ளது.
பத்து வருடங்களுக்குள் ஆயிரம் மணித்தியாலங்கள் அல்லது அண்ணளவாக ஒரு நாளைக்கு 17 நிமிடங்கள் கையடக்கத் தொலைபேசியை பயன்படுத்துவதனால் புற்றுநோய் உண்டாகும் ஆபத்து நூற்றுக்கு அறுபது வீதம் அதிகம் உள்ளதாக இந்த ஆய்வுகளில் இருந்து உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
கையடக்க தொலைபேசி சமிக்ஞை (Signal)களிலிருந்து வரும் கதிர்வீச்சு பொறிமுறைகளில் பாதிப்பை ஏற்படுத்துவதனால் மூளையில் மன அழுத்தம் ஏற்பட்டு டி.என்.ஏ சேதம், புற்றுநோய் மற்றும் உயிரணு இறப்பு கூட ஏற்படுகிறது என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
கையடக்கத்தொலைபேசி பயன்பாடு மற்றும் உடல்நலம் குறித்த விரிவான விளக்கத்தைப் பெறுவதற்காக பேர்க்லி பல்கலைக்கழகத்தின் வல்லுநர்கள் இதற்கு முன்னர் அமெரிக்கா, சுவீடன், ஐக்கிய இராச்சியம், ஜப்பான், தென் கொரியா மற்றும் நியூசிலாந்து ஆகிய நாடுகளில் ஆய்வுகளை மேற்கொண்டனர்.
2011 ஆம் ஆண்டில், 87 சதவீதமான வீடுகளில் மொபைல் போன்கள் இருந்ததாகவும், 2020 ஆம் ஆண்டில் அந்த எண்ணிக்கை 95 சதவீதமாக அதிகரித்துள்ளதாகவும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
இதேவேளை, ஆராய்ச்சியை நடத்திய பேர்க்லி பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஜோயல் மோஸ்கோவிட்ஸ் (Joel Moskowitz) இதுதொடர்பாக தெரிவிக்கையில் , மக்கள் கையடக்க தொலைபேசிகளின் பயன்பாட்டை குறைக்க வேண்டும் என்றும், அந்த சாதனங்களை முடிந்தவரை தங்கள் உடலிலிருந்து தொலைவில் வைத்திருப்பது முக்கியம் என்றும் கூறினார். தொலைபேசி அழைப்புகளை மேற்கொள்ளும்போது அவர்கள் முடிந்தவரை கேபில் தொலைபேசிகளைப் பயன்படுத்த முயற்சிக்க வேண்டும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.