September 30, 2023 9:44 am
adcode

Mi 17 ரக ஹெலிகாப்டரின் உயர் பாதுகாப்பு அம்சங்களையும் மீறி எப்படி விபத்து நடந்திருக்க முடியும்?: முன்னாள் கர்னல் தரும் தகவல்கள்

இந்தியாவின் முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் பயணம் செய்த ஹெலிகாப்டர் விபத்திற்குள்ளாகி, தலைமைத் தளபதி உட்பட 13 பேர் உயிரிழந்திருக்கும் நிலையில், அந்த ஹெலிகாப்டரின் பாதுகாப்பு அம்சங்கள் குறித்து தரைப்படையின் ஓய்வுபெற்ற கர்னல் கணேசன் பிபிசியின் செய்தியாளர் முரளிதரன் காசி விஸ்வநாதனிடம் பேசினார். பேட்டியிலிருந்து:

கே. இந்திய முப்படைகளின் தலைமைத் தளபதி பயணம் செய்த ஹெலிகாப்டர் விபத்திற்குள்ளாகியிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. பொதுவாக இம்மாதிரி மிக முக்கியமானவர்கள் பயணம் செய்யும் ஹெலிகாப்டர்களுக்கான பாதுகாப்பு சோதனை எப்படி இருக்கும்?

. விபத்து நடந்த தினம் இந்திய வரலாற்றில் ஒரு கறுப்பு தினம். பல ராணுவ தளபதிகள் இருக்கிறார்கள் என்றாலும், முப்படைகளின் தலைவர் ஒரு ராணுவ விமான விபத்தில் உயிரிழப்பது மோசமானது.

அவர் பயணம் செய்த Mi 17 V5 என்ற இந்த ஹெலிகாப்டர் ரஷ்யத் தயாரிப்பு. இந்தியாவில் இந்த வகை ஹெலிகாப்டர்கள் கிட்டத்த 150 என்ற எண்ணிக்கையில் உள்ளன. குடியரசுத் தலைவர், பிரதமர் ஆகியோர் இந்த ஹெலிகாப்டர்களைத்தான் பயன்படுத்துகிறார்கள். பல முறை பயணம் செய்திருக்கிறார்கள். இந்த ஹெலிகாப்டர் தவிர, நம்மிடம் சீட்டா, சேடக் வகை ஹெலிகாப்டர்களும் உள்ளன.

ஆனால், இந்த சீட்டா, சேடக் வகை ஹெலிகாப்டர்கள் அடிக்கடி விபத்திற்குள்ளாகும் என்பதால், 2008க்குப் பிறகு இந்த Mi 17 ரக ஹெலிகாப்டர்களை பயன்படுத்தத் துவங்கினோம். இந்த ஹெலிகாப்டர் மிகவும் உறுதியான, பாதுகாப்பான ஹெலிகாப்டர்.

அது தவிர, ஒரு முக்கியப் பிரமுகர் ஹெலிகாப்டரில் பயணிக்கப் போகிறார் என்றால், அதற்கு முன்பாக ஹெலிகாப்டர் முழுமையாகப் பரிசோதிக்கப்படும். எந்த விமானி அந்த ஹெலிகாப்டரை இயக்கப் போகிறாரோ அவர், ஒன்றிரண்டு நாட்களுக்கு முன்பாக அதே பாதையில் ஹெலிகாப்டரை இயக்கி, எங்கு இறக்க வேண்டுமோ அங்கு ஹெலிகாப்டரை இறக்கி எவ்வளவு நேரம் ஆகிறது என்பதையெல்லாம் துல்லியமாக குறித்துக்கொள்வார்கள்.

அந்த ஹெலிகாப்டர் திரும்பி வந்து உரிய இடத்தில் நிறுத்தப்பட்டதும் அதனை வேறு யாரும் நெருங்கிவிடாதபடி பாதுகாப்பு வீரர்கள் நிறுத்தப்படுவார்கள். அதேபோல, பல ஹெலிகாப்டர்கள் இருக்கும்பட்சத்தில் எந்த ஹெலிகாப்டரைத் தேர்வுசெய்வது என்பதிலும் பல்வேறு வழிமுறைகள் இருக்கின்றன. 10 வருடம் பழைய ஹெலிகாப்டரும் 7 வருடம் பழைய ஹெலிகாப்டரும் இருந்தால் 7 வருடம் ஆன ஹெலிகாப்டரையே தேர்வுசெய்வார்கள். தேய்ந்து போன பாகங்களைக் கொண்ட ஹெலிகாப்டரைத் தேர்வுசெய்ய மாட்டார்கள்.

இவையெல்லாம் போக, திடீர் தேவைக்கென மற்றொரு ஹெலிகாப்டரும் தயார் நிலையில் நிறுத்தப்பட்டிருக்கும். ஆகவே இம்மாதிரி முக்கியப் பிரமுகர்களின் பயணத்திற்கு இந்தியாவில் இதுதான் மிகச் சிறந்த ஹெலிகாப்டர்.

கே. இவ்வளவு பாதுகாப்பு ஏற்பாடுகளை மீறி எப்படி விபத்து நடந்திருக்க முடியும்?

ப. எல்லா பாதுகாப்பு சோதனைகளுக்கும் வரையறை உண்டு. நேற்று சர்வீஸ் சென்றுவந்த வாகனம், இன்று சாலையில் செல்லும்போது தீ பிடித்து எரிகிறது. ஆகவே இயந்திரக் கோளாறுகளுக்கு மனித முயற்சிகளைக் குற்றம் சொல்ல முடியாது. எல்லாச் சோதனைகளையும் செய்த பிறகும், தவறே நடக்க முடியாது எனச் சொல்ல முடியாது. இயந்திரங்களில் ஏற்படும் கோளாறுகளை எந்த அளவுக்குக் கண்டுபிடிக்க முடியமோ, அவ்வளவுதான் கண்டு பிடிக்க முடியும். திடீரென பிரச்னை ஏற்பட்டுவிட்டால், அதை யாராலும் சொல்ல முடியாது.

விபத்து நடந்த பிகுதி

கே. இந்த Mi 17 ரக ஹெலிகாப்டர்கள் எல்லா காலநிலையிலும் பறக்கக்கூடியவையா?

. ஆம். இதனை ‘all weather ஹெலிகாப்டர்’ என்பார்கள். உலகில் பாதி நாடுகளுக்கு மேல் தங்கள் நாட்டு அதிபர்கள், பிரதமர்கள் பறப்பதற்கு பயன்படுத்துகிறார்கள். அதன் பாதுகாப்பு அம்சங்கள் அந்த அளவுக்கு உயர்ந்தவை. அதன் ‘காக்பிட்டின்’ பக்கவாட்டுப் பகுதிகள் ஆயுதம் தாக்காத வகையில் பிளேட்டிங் செய்யப்பட்டிருக்கும். ஹெலிகாப்டர் விழுந்தாலும் விமானி பாதுகாக்கப்படும் வகையில் அந்த காக்பிட் உருவாக்கப்பட்டிருக்கும்.

எரிவாயு நிரப்பும் கலன் பாலியுரேத்தின் நுரையால் இரு முறை இன்சுலேட் செய்யப்பட்டிருக்கும். மேலே இருந்து கீழே விழுந்தால், அந்த எரிபொருள் கலன் வெடித்துவிடக்கூடாது என்பதற்காகத்தான் இத்தனை ஏற்பாடு. இந்த விபத்தில்கூட, திறந்த வெளியில் ஹெலிகாப்டர் விழுந்திருந்தால் மரணங்கள் தவிர்க்கப்பட்டிருக்கும். காடுகள் நிறைந்த மலைப் பகுதியில் விழுந்ததால்தான் இவ்வளவு பெரிய விபத்து ஏற்பட்டுவிட்டது.

கே. ஹெலிகாப்டர் விபத்தில் நாம் பல தலைவர்களை இழந்திருக்கிறோம். இருந்தபோதும் நாம் ஏன் அவற்றைத் தொடர்ந்து பயன்படுத்த வேண்டியிருக்கிறது..?

. முக்கியப் பிரமுகர்களின் வேலைப் பளு அந்த அளவுக்கு இருக்கிறது. அவர்களுக்கு அடுத்தடுத்த வேலைகள் இருக்கும். இதே ராவத் திம்மப்பூரில் கோர் கமாண்டராக இருக்கும்போது சீட்டா என்ற ஹெலிகாப்டரில் சென்று, அதில் உயிர் பிழைத்தார். ஆகவே, விபத்துகளை முன்பே எதிர் நோக்க முடியாது.

அவர் சூலூரிலிருந்து வெலிங்கடனுக்கு சென்றால் 3- 4 மணி நேரம் ஆகும் என்பதால் ஹெலிகாப்டரை பயன்படுத்தியிருக்கிறார். உயர் அதிகாரிகள், பெரிய தலைவர்களுக்கு அங்கீகரிக்கப்பட்ட வாகனம்தான் இது.

கே. முப்படைகளின் தளபதி மரணமடைந்திருக்கும் நிலையில், அவரது பணிகளை யார் கவனிப்பார்கள், அடுத்ததாக யார் அந்தப் பொறுப்புக்கு வருவார்கள்?

ப. Chief of Defence Staff என்ற பதவியை வகிக்கும் முதல் நபர் இவர்தான். CDSன் பதவி காலியாகும்போது, தரைப்படை, விமானப் படை, கடற்படைகளின் தளபதிகளில் யார் அனுபவம் வாய்ந்தவரோ அவர் இந்தப் பொறுப்புக்கு வரக்கூடும். இதில் பல்வேறு அம்சங்களை ஆலோசித்து, இதனை முடிவுசெய்வார்கள். இப்போது ஜெனரல் முகுந்த் நர்வானே மிகவும் மூத்தவராக இருக்கிறார். அவரை நியமிக்கலாம் என எதிர்பார்க்கலாம்.

கே. இந்த நியமனங்களுக்கு காலக் கெடு ஏதாவது இருக்கிறதா?

ப. முப்படைகளின் தளபதிகள் ஓய்வு பெறும்போது, அதனை எப்படி நிரப்புவது என்பதற்கு முறைகள் இருக்கின்றன. Chief of Defence Staff என்ற பதவியைப் பொறுத்தவரை, புதிதாக உருவாக்கப்பட்ட ஒரு பதவி. தினசரி நடவடிக்கையில் அவர்களுடைய பொறுப்பு என்பது மிகக் குறைவு. மூன்று படைகளையும் ஒருங்கிணைத்து, முப்படைகளுக்கும் பிரதமருக்கும் இடையில் இவர் பாலமாக இருப்பார். ஆகவே விரைவில் ஒருவரை நியமிப்பார்கள் என நம்பலாம்.

Share

Related News